'விக்கிலீக்ஸ்' நிறுவனர் அசாஞ்சே பிரிட்டன் சிறையிலிருந்து விடுவிப்பு
'விக்கிலீக்ஸ்' நிறுவனர் அசாஞ்சே பிரிட்டன் சிறையிலிருந்து விடுவிப்பு
'விக்கிலீக்ஸ்' நிறுவனர் அசாஞ்சே பிரிட்டன் சிறையிலிருந்து விடுவிப்பு
UPDATED : ஜூன் 26, 2024 08:03 AM
ADDED : ஜூன் 25, 2024 07:04 PM

வாஷிங்டன் : அமெரிக்காவுடன் ஏற்பட்ட சமரசத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார், 'விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே.
ஆஸ்திரேலியாவில் பிறந்த, ஜூலியன் அசாஞ்சே, 52, அமெரிக்காவில் விக்கிலீக்ஸ் என்ற இணைய செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். கடந்த, 2010ம் ஆண்டில், அமெரிக்க ராணுவம் தொடர்பான லட்சக்கணக்கான ரகசிய ஆவணங்களை, அவர் தன் இணையதளத்தில் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க நீதிமன்றத்தில், அசாஞ்சே மீது, 2019ல் 18 குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், உளவு சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த ஒரு சட்டத்தின்கீழ் மட்டும், 175 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கும் வாய்ப்பு இருந்தது.
அமெரிக்காவில் இருந்து தப்பிய அசாஞ்சே, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள ஈக்வடார் துாதரகத்தில் தஞ்சமடைந்தார்.கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, ஈக்வடார் துாதரகத்திலேயே அசாஞ்சே தங்கி வந்தார். கடந்த, 2019 ஏப்.,ல் துாதரகத்தில் இருந்து அதிரடியாக கைது செய்யப்பட்ட ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள பால்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த, 2022ல் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த, பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மே மாதத்தில், இரண்டு பிரிட்டன் நீதிபதிகள், மேல்முறையீடு செய்வதற்கு அசாஞ்சேவுக்கு வாய்ப்பு அளித்தனர். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் அசாஞ்சேவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசு, முதல் முறையாக அமெரிக்க அரசுக்கு நேரடியாக கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, ஒரு சமரசம் ஏற்பட்டது. அதன்படி, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் நிரபராதி என்று வாதிட ஒப்புக் கொண்டால், விடுதலை செய்வதாக கூறப்பட்டது. இதற்கு அசாஞ்சே ஒப்புக் கொண்டார்.
குற்ற வழக்கு
இந்த ஒப்பந்தத்தின்படி, அசாஞ்சேவுக்கு அதிகபட்சம், 62 மாதங்கள் சிறை தண்டனை கிடைக்கும். அவர் ஏற்கனவே, பிரிட்டன் சிறையில் இருந்த, ஐந்து ஆண்டுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. இதன்படி, மிக விரைவில், தன் சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு அவர் செல்ல முடியும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியன் அசாஞ்சே, நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார். அவர் தனி விமானம் வாயிலாக அமெரிக்காவுக்குபுறப்பட்டார்.
பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ஒரு பகுதியான வடக்கு மரியானா தீவில் உள்ள நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.