நீலகிரி, கோவைக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை
நீலகிரி, கோவைக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை
நீலகிரி, கோவைக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை
ADDED : ஜூலை 19, 2024 06:31 AM

சென்னை: 'நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கன மழையும். கோவை உள்ளிட்ட, 4 மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அம்மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில், இன்று காலை முதல் மதியம் வரை அதிகன மழை, அதாவது 21 செ.மீ.,க்கு அதிகமாக பெய்யும்.
கோவையில் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில், இன்று பகல் வரை கன மழையும் பெய்யும்.
இன்று பிற்பகல் முதல் நீலகிரி மாவட்டத்தில், மிக கன மழை பெய்யும். கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் கன மழையும் பெய்யும். மற்ற மாவட்டங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில், நேற்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இது நாளை வலுப் பெற்று, ஒடிசா கடற்கரை நோக்கி செல்லும்.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சென்னையில் வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் லேசான மழை தொடரும்.
மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதி, மத்திய வங்கக் கடல், வடக்கு அந்தமான், மத்திய மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல், தெற்கு அரபிக் கடல், லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில், மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுகிறது.
எனவே, வரும் 22ம் தேதி வரை மீனவர்கள், கடலுக்குள் செல்ல வேண்டாம். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 20; சின்னக்கல்லாரில், 15; எமரால்டு, 12 செ.மீ., மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.