ஊழல்களுக்கு நாமும் காரணம்: கமல் பேச்சு
ஊழல்களுக்கு நாமும் காரணம்: கமல் பேச்சு
ஊழல்களுக்கு நாமும் காரணம்: கமல் பேச்சு
ADDED : ஜூன் 25, 2024 02:02 PM

சென்னை: நாட்டில் ஊழல்கள் அதிகமானதுக்குக் காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல; நாமும் தான் காரணம்; நாம் இல்லாமல் ஊழல்கள் நடக்குமா? என நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இந்தியன் 2'. இப்படம் அடுத்த மாதம் ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் இன்று (ஜூன் 25) மாலை 7 மணிக்கு வெளியாகிறது. டிரைலர் வெளியீட்டிற்கு முன்னதாக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
1996ம் ஆண்டு இந்தியன் படத்தின் டப்பிங்கின் போதே 2ம் பாகம் பற்றி பேசினோம். இந்தியன்-2 படத்துக்கான கருவை எங்களுக்கு இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனென்றால் இந்த ஊழல் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தாவின் 2ம் வருகைக்கு அர்த்தம் கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்ததுபோல் தெரியவில்லை; சந்தோசமாகப் பணியாற்றியுள்ளனர்.
நானும், இயக்குநர் ஷங்கரும் மீண்டும் நினைத்தாலும் இதுபோல் திரைப்படத்தை எடுக்க முடியாது என ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் சொன்னார். எடுத்திருக்கிறோம். அதுதான் இந்தியன் - 3. நாட்டில் ஊழல்கள் அதிகமானதுக்குக் காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல; நாமும் தான் காரணம்; நாம் இல்லாமல் ஊழல்கள் நடக்குமா?. இவ்வாறு அவர் பேசினார்.