டிப்பர் லாரி - வேன் மோதல்; 2 பெண்கள், குழந்தை பலி
டிப்பர் லாரி - வேன் மோதல்; 2 பெண்கள், குழந்தை பலி
டிப்பர் லாரி - வேன் மோதல்; 2 பெண்கள், குழந்தை பலி
ADDED : ஜன 01, 2024 06:18 AM

துாத்துக்குடி: உத்தர பிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டம், ரஹ்நாத் மந்திர் பகுதியை சேர்ந்த அமித் குடும்பத்தினர் 17 பேர், கடந்த, 17ம் தேதி ராமேஸ்வரம் சுற்றுலா வந்தனர்.
அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் வாடகை வேனில், சூரிய உதயம் பார்ப்பதற்காக கன்னியாகுமரி சென்று கொண்டிருந்தனர்.
துாத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரும் வழியில், அதிகாலை, 2:20 மணிக்கு வல்லநாடு அருகே ஒரு வழிச்சாலையில் வந்தபோது, அதே சாலையில் எதிரே வேகமாக மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி, வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில், அமித் மனைவி சுமன், 32, உறவினர் பார்வதி, 40, சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொரு வேனில் வந்த பயணியர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயமுற்ற 14 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதில், 1 வயது பெண் குழந்தை, சிகிச்சைக்கு செல்லும் வழியில் இறந்தது.
தொடரும் விபத்து
துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளி கடத்தப்படுகிறது. வல்லநாடு மலைச்சரிவில் சரல் மண் திருட்டுத்தனமாக அள்ளப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுத்ததற்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
எனினும் முறப்பநாடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் மணல் கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. சரளை மண் ஏற்ற டிப்பர் லாரிகள் குறுக்கு வழியில் எதிர்சாலையில் செல்வதால் அடிக்கடி உயிர் பலிகள் ஏற்படுகின்றன.
முறப்பநாடு பகுதியில், 2017 முதல் தற்போது வரை, 30க்கும் மேற்பட்ட விபத்துகளில், 20 பேர் வரை பலியாகி உள்ளனர்.
நேற்றைய விபத்திலும் டிப்பர் லாரி டிரைவர் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடினார். வல்லநாடு போலீசார் அவரை தேடி வருகின்றனர்.