Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/'கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு'; ஊழலை வெளிப்படுத்தியதால் ஆவேசம் என புகார்

'கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு'; ஊழலை வெளிப்படுத்தியதால் ஆவேசம் என புகார்

'கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு'; ஊழலை வெளிப்படுத்தியதால் ஆவேசம் என புகார்

'கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு'; ஊழலை வெளிப்படுத்தியதால் ஆவேசம் என புகார்

ADDED : மார் 25, 2025 05:43 AM


Google News
Latest Tamil News

அராஜகத்தின் வெளிப்பாடு'


அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: சவுக்கு சங்கர் வீட்டில், அவரது தாய் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை பொருட்கள் என்று, அனைத்து பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளனர். இதுபோன்ற கீழ்த்தரமான செயல், தாக்குதல் கண்டனத்திற்கு உரியது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக் கொள்ள மாட்டர்கள். உண்மையில், இந்த சம்பவம் கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக் கொள்ளும் தி.மு.க., ஆட்சியில், இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டும். இந்த கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையாக தண்டிக்க வேண்டும்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தி.மு.க., ஆட்சியின் ஊழலையும், சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்து பேசுபவர்கள் மீது வழக்கு தொடர்வது, நள்ளிரவில் போலீசாரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வது என தொடர்ந்து, அராஜக போக்கில் ஈடுபட்டு வருகிறது, தி.மு.க., அரசு.
தி.மு.க., அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் மீது நடத்தப்படும் வன்முறையை கடுமையாக கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, மூன்று மணி நேரம் கடந்தும், போலீசார் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய துாண்டுதலில் இது நடக்கிறது என்பதை, உணர முடிகிறது.
ஆட்சியாளர்களின் இந்த அராஜக போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: சவுக்கு சங்கர் இல்லத்தில் அரங்கேறி இருக்கும் திட்டமிட்ட வன்முறை அநாகரிகத்தின் உச்சம். புகார் அளித்த பின்பும் நடவடிக்கை எடுக்காத போலீசாரின் அலட்சியம் கண்டனத்திற்கு உரியது. இந்த நிலையை ஏற்படுத்தியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.



பின்னணியில் செல்வப்பெருந்தகை


சவுக்கு சங்கர் மேலும் கூறியதாவது: தமிழக அரசு, சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது உண்மையிலேயே துாய்மை பணியாளர்களுக்கான சிறந்த திட்டம் தான்.
துாய்மை பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 213 துாய்மை பணியாளர்களுக்கு கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் உண்மையான பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையும் மற்றொரு நபரும், ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, துாய்மை பணியாளர்களை கணக்கு காட்டி, கழிவுநீர் அகற்றும் ஊர்திகளை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மாதம், 20 - 50 ஆயிரம் ரூபாய் வரை, துாய்மை பணியாளர்களுக்கு கொடுத்துவிட்டு, கோடிக்கணக்கில் சட்ட விரோதமாக சம்பாதிக்கின்றனர் என்பதை ஆதாரத்துடன், 'வீடியோ' வெளியிட்டு இருந்தேன்.
இதனால், செல்வப்பெருந்தகை துாண்டுதலின்படி, துாய்மை பணியாளர்கள் என்ற போர்வையில், கூலிப்படையினர் என் வீட்டை சூறையாடி உள்ளனர். இதற்கு, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உடந்தையாக இருந்துள்ளார். வீடு சூறையாடப்பட்டதால், அதன் உரிமையாளர், 10 நாட்களில் காலி செய்யுமாறு கூறி விட்டார். இச்சம்பவம், தி.மு.க., அரசின் உண்மை முகத்தை வெளிப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சம்பவம் குறித்து, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு அனுப்பி இருப்பதாக டி.ஜி.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us