ஜூன் 24 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்
ஜூன் 24 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்
ஜூன் 24 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்
ADDED : ஜூன் 07, 2024 12:18 PM

சென்னை: ஜூன் 24ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும் என்றும், அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பின் எவ்வளவு நாட்கள் கூட்டம் நடைபெறும் என முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில், தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்.,12ல் துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் 2 நிமிடங்களில் தன்னுடைய உரையை முடித்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதமும் கூட்டத்தொடரில் நடைபெற்றது. பிப்.,21ம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மார்ச்சில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதன்படி 7 கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது.
இந்த நிலையில், ஜூன் 24ம் தேதி காலை 10 மணி முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பின் எவ்வளவு நாட்கள் சட்டசபை நடக்கும் என்பது முடிவு செய்யப்படும் என்றும், மானிய கோரிக்கை மீதான விவாதம் எந்தெந்த நாட்களில் நடைபெறும் என்பது கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் அப்பாவு தெரிவித்தார்.