துரைமுருகன் விடுவிப்பு ரத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை
துரைமுருகன் விடுவிப்பு ரத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை
துரைமுருகன் விடுவிப்பு ரத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை
ADDED : செப் 23, 2025 07:55 AM

சொத்துக்குவிப்பு வழக்கில், அமைச்சர் துரைமுருகன் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த, 2006 - 11 வரையிலான தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக, 1.40 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2011ல் வழக்கு பதிவு செய்தது.
அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த வேலுார் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் கடந்த 2017ல் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேலுார் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் துரைமுருகன் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். மேலும், மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்ததோடு, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -