பொது வினியோகத் திட்டத்திற்கு தனித்துறை கோரி இன்று மாநிலம் தழுவிய போராட்டம்
பொது வினியோகத் திட்டத்திற்கு தனித்துறை கோரி இன்று மாநிலம் தழுவிய போராட்டம்
பொது வினியோகத் திட்டத்திற்கு தனித்துறை கோரி இன்று மாநிலம் தழுவிய போராட்டம்
ADDED : மார் 25, 2025 05:58 AM

சிவகங்கை : பொது வினியோகத் திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(மார்ச் 25) மாநிலம் தழுவிய அளவில் கலெக்டர் அலுவலகங்கள் முன் கருப்பு சட்டை அணிந்து நியாயவிலைக்கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழக அரசு எடை முறைகேடுகளை தவிர்க்க ரேஷன்கடைகளுக்கு அனைத்து உணவுப்பொருட்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறும் போது, அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு பணியாளர்களுக்கு தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் கே.ஆர்.விஸ்வநாதன் கூறியதாவது: ரேஷன் கார்டுதாரர்களுக்கு எடைகுறைவின்றி அனைத்து உணவுப்பொருட்களும் கிடைக்க செய்யும் விதத்தில் பொருட்களை பொட்டலமாக வழங்க அரசு மறுத்து வருகிறது. இதனால் கோடவுனில் இருந்து கடைக்கு ரேஷன் பொருட்கள் வருவதற்குள் பல கட்ட முறைகேடுகள் நடக்கிறது.
ஆனால், இறுதியில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீது தான் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த பிரச்னையை தவிர்க்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி அரசு எங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை. இதனால் எங்களின் எதிர்ப்பை அரசின் பார்வைக்கு கொண்டு செல்லும் விதம் அனைத்து நியாயவிலை கடை பணியாளர்களும் கருப்பு சட்டை அணிந்து கலெக்டர் அலுவலகம் முன் இன்று மாலை நேர போராட்டம் நடத்த உள்ளனர் என்றார்.