Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டுமா? 3 நீதிபதிகள் விசாரணைக்கு பரிந்துரை

அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டுமா? 3 நீதிபதிகள் விசாரணைக்கு பரிந்துரை

அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டுமா? 3 நீதிபதிகள் விசாரணைக்கு பரிந்துரை

அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டுமா? 3 நீதிபதிகள் விசாரணைக்கு பரிந்துரை

ADDED : செப் 07, 2025 07:19 AM


Google News
Latest Tamil News
சென்னை : தண்டனை குறைப்பு, முன்கூட்டியே விடுதலை வழங்குவது போன்ற விவகாரத்தில், அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய, மாநில அரசு பரிந்துரை செய்தும், அந்த கோரிக்கைகளை, கவர்னர் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, 'இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள், இரு வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன' என, வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, பி.புகழேந்தி, எம்.முகமது சைபுல்லா, எஸ்.மனோகரன் மற்றும் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆகியோர் நீதிபதிகளிடம் சுட்டிக் காட்டினர்.

அப்போது, முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்து, கவர்னர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கொலை குற்றவாளி வீரபாரதி என்பவர் தொடர்ந்த ஒரு வழக்கில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு, 'கடந்தாண்டு அக்., 17ல், முன்கூட்டியே விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரைத்த பின், கொடுங்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட கைதியின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது; இந்த விஷயத்தில் கவர்னர் சுயமாக செயல்பட முடியாது; அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தது.

மற்றொரு கொலை குற்றவாளி முருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவுக்கு மாறாக, உரிய பிரிவுகளில் வழக்கு தொடரப்படாததை சுட்டிக்காட்டி, 'அமைச்சரவை பரிந்துரைத்தும், முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்த கவர்னரின் உத்தரவு செல்லும்' என, கடந்தாண்டு நவ., 6ல் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த இரு அமர்வுகள், இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதால், முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனை குறைப்பு வழங்குவது போன்ற விஷயங்களில், அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்து, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அதற்கு ஏதுவாக இந்த வழக்குகளையும், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவுக்கு அனுப்பி வைக்க, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, எந்தெந்த சூழ்நிலைகளில் அமைச்சரவை பரிந்துரைக்கு மாறாக கவர்னர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்பதையும், மூன்று நீதிபதிகள் அமர்வு முடிவு செய்ய வேண்டும் என, தங்கள் உத்தரவில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us