புரட்டாசி சனி; பெருமாள் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்
புரட்டாசி சனி; பெருமாள் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்
புரட்டாசி சனி; பெருமாள் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்
ADDED : செப் 20, 2025 11:31 AM

மதுரை: புரட்டாசி முதல் சனியான இன்று (செப்-20) பல்வேறு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஹிந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.
இன்று (செப்.20) புரட்டாசி முதல் சனி உற்ஸவத்தை பெருமாள் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருச்சி ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை, தென்திருப்பதி, சீனிவாச பெருமாள் கோயிலில், இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சுப்ரபாத பூஜை மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனையடுத்து ராஜ அலங்கார பெருமாளை தரிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 5:30 மணிக்கு கால சாந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 8:00 மணிக்கு சாயரட்சை நடக்கிறது.
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 3:30 மணிக்கு மூலவருக்கு பால் தயிர் தேன் இளநீர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு கரி வரதராஜ பெருமாள் காட்சியளித்தார்.
சித்தாபுதுார் ஜெகன்நாதபெருமாள், உக்கடம் லட்சுமிநரசிம்மர், பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி, சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி, கோட்டைமேட்டிலுள்ள கரிவரதராஜ பெருமாள், பேரூர் பச்சாபாளையத்திலுள்ள தசாவதாரபெருமாள், கோவைப்புதூரிலுள்ள பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.