பொன்முடியின் சைவம், வைணவம் பேச்சு; டி.ஜி.பி., பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
பொன்முடியின் சைவம், வைணவம் பேச்சு; டி.ஜி.பி., பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
பொன்முடியின் சைவம், வைணவம் பேச்சு; டி.ஜி.பி., பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 14, 2025 03:16 AM

சென்னை : சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில், டி.ஜி.பி., மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில், தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நடந்த கூட்டத்தில், பங்கேற்ற தி.மு.க., வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு, ஹிந்துக்கள், மகளிர் அமைப்புகள், பெண்கள் என, பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து, பொன்முடி நீக்கப்பட்டார். பின்னர், அமைச்சர் பதவியும் பறிபோனது.
இந்த நிலையில்,'பொன்முடியின் பேச்சு, பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், சைவம், வைணவம் என மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் உள்ளது; வெறுப்பு பேச்சு வரம்பிற்குள் வருகிறது,' எனக் கூறி, தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்யுமாறு, சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
அதன்படி, பொன்முடிக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம் பதிவு செய்த வழக்கின் விசாரணை, நீதிபதி வேல்முருகன் முன், நேற்று நடைபெற்றது.
அப்போது, வழக்கு தொடர்பான ஆவணங்களை டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக, இருவரும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.