இரண்டாவது நாளாக நிரம்பி வழியும் பில்லூர் அணை
இரண்டாவது நாளாக நிரம்பி வழியும் பில்லூர் அணை
இரண்டாவது நாளாக நிரம்பி வழியும் பில்லூர் அணை
ADDED : ஜூலை 17, 2024 08:21 AM

கோவை: பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. தொடர்ந்து 2வது நாளாக அணை நிரம்பி வழிவதால், அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்ட உயரம் 100 அடியாகும். அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும் போது, அணை நிரம்பியதாக அறிவித்து, அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.
நேற்று முன்தினம் (ஜூலை 15) பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால், அணைக்கு வினாடிக்கு, 18,120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதனால் நேற்று அதிகாலை பில்லூர் அணை, 97 அடியை எட்டியதை அடுத்து அணை நிரம்பியது. நேற்று இரவும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதனால் அணைக்கு அதிகபட்சமாக, வினாடிக்கு, 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
ஏற்கனவே அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வருகின்ற தண்ணீரை அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றி வருகின்றனர். இதனால் பில்லூர் அணை இரண்டாவது நாளாக நிரம்பி வழிகிறது. அதோடு பவானி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.