Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மோடியை எதிர்க்கும் கூட்டணியை மக்கள் என்றும் ஏற்க மாட்டார்கள்

மோடியை எதிர்க்கும் கூட்டணியை மக்கள் என்றும் ஏற்க மாட்டார்கள்

மோடியை எதிர்க்கும் கூட்டணியை மக்கள் என்றும் ஏற்க மாட்டார்கள்

மோடியை எதிர்க்கும் கூட்டணியை மக்கள் என்றும் ஏற்க மாட்டார்கள்

ADDED : ஜன 31, 2024 01:01 AM


Google News
ரிஷிவந்தியம்:''மத்திய அரசு இலவசமாக வழங்கும் திட்டத்துக்கு லஞ்சம் வாங்குவது மட்டுமே தி.மு.க.,வின் சாதனையாக உள்ளது'' என, அண்ணாமலை பேசினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் நடந்த 'என் மண்; என் மக்கள்' பொதுக்கூட்டத்தில் பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்துார் ஆகிய நான்கு பெருநகரங்கள் தமிழகத்தின் உற்பத்தி திறனில் 32 சதவீதம் பங்கு வகிக்கிறது. ஆனால், ரிஷிவந்தியம் போன்ற விவசாயம், கிராமங்களை உள்ளடக்கிய பகுதி வளர்ச்சி பெறாமலேயே உள்ளது.

இங்குள்ள பிள்ளைகள் படித்து முடித்த பிறகு சென்னை, கோயம்புத்துார் போன்ற வேறு ஊருக்கும், வெளி நகரங்களுக்கும் சென்று பணிபுரிகின்றனர். வளர்ச்சி என்பது நம்மை தொட்டுக்கூட பார்க்கவில்லை.

இதுவரை 167 தொகுதிக்கு பாதயாத்திரை சென்றுள்ளேன். அனைத்து தொகுதியின் தலைநகரும் தாலுகாவாக உள்ளது. ஆனால், ரிஷிவந்தியம் மட்டும்தான் தாலுகாவாக இல்லை.

கடந்த தேர்தல் பரப்புரையில் ரிஷிவந்தியத்தை தாலுகாவாக மாற்றுவேன் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், ஆட்சிக்கு வந்தும் கூட ரிஷிவந்தியம் தாலுகா அந்தஸ்து பெறவில்லை. வரும் தேர்தலில் பா.ஜ.,வுக்கு அதிகாரம் கிடைத்ததும் ரிஷிவந்தியம் தாலுகாவாக மாற்றப்படும். 10 ஆண்டு கால காங்., ஆட்சியில் 2ஜி, சுரங்கம், ெஹலிகாப்டர் என 12 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது.

குறிப்பாக, கடந்த 2014ம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் உரத்தட்டுப்பாடு இருந்தது.

பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு உரத்தட்டுப்பாடு என்கிற பிரச்னையே இல்லை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.எம்., கிசான் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 648 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 50,030 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 51,000 வீடுகளுக்கு நேரடியாக பைப் மூலமாக குடிநீர் வழங்கப்படுகிறது. மத்திய அரசு இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்குவது மட்டுமே தி.மு.க.,வின் சாதனையாக உள்ளது.

'இண்டியா' கூட்டணியை ஆரம்பித்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தற்போது, பா.ஜ.,வில் இணைந்து விட்டார்.

மோடியை எதிர்த்து உருவாகும் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். 2024 தேர்தலில் நாடு நன்றாக இருக்க பிரதமர் நரேந்திரமோடியை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us