Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இழுபறியில் காங்., கையெழுத்து இயக்கம் அறிக்கை கேட்கிறது கட்சி மேலிடம்

இழுபறியில் காங்., கையெழுத்து இயக்கம் அறிக்கை கேட்கிறது கட்சி மேலிடம்

இழுபறியில் காங்., கையெழுத்து இயக்கம் அறிக்கை கேட்கிறது கட்சி மேலிடம்

இழுபறியில் காங்., கையெழுத்து இயக்கம் அறிக்கை கேட்கிறது கட்சி மேலிடம்

ADDED : அக் 04, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
தமிழகத்தில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம் மந்தமாக இருப்பதால், கட்சி மேலிடத்தில் இருந்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'ஓட்டு திருட்டு' என கூறி, பா.ஜ.,வை கண்டித்து, தமிழகத்தில் காங்., சார்பில் கையெழுத்து இயக்கம் அறிவிக்கப்பட்டது. 'இரண்டு கோடி கையெழுத்து லட்சியம்; ஒரு கோடி கையெழுத்து நிச்சயம்' என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.

கடந்த செப்., 15ல் துவக்கப்பட்ட கையெழுத்து இயக்கம், வரும் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கட்சி அமைப்பு ரீதியாக உள்ள, 77 மாவட்டங்களில், தென் சென்னை மேற்கு, காஞ்சிபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு தற்போது தலைவர்கள் இல்லை. எனவே, மாவட்ட பொறுப்பாளர்களிடம் பணி ஒப்படைக்கப்பட்டது.

மாவட்டத் தலைவர்கள் இல்லாததால், 10 மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம் சரியாக நடக்கவில்லை. குறிப்பாக, தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம் நடக்கவே இல்லை என, கட்சி தலைமைக்கு புகார் வந்துள்ளது.

இது குறித்து, தமிழக காங்., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:


ஒவ்வொரு தொகுதியிலும் தலா 50,000 பேரிடம் கையெழுத்து பெற அறிவுறுத்தப்பட்டது. முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி, சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய ஐந்து கோஷ்டி தலைவர்களுக்கு, சட்டசபை தொகுதிகள் பிரித்து கொடுக்கப்பட்டு, கையெழுத்து இயக்க பணிகள் துவங்கின.

ஆனால், கோவை, சேலம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், சென்னை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் மட்டுமே பணிகள் நடந்துள்ளன. மற்ற மாவட்டங்களில், கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை. 'ஒரு கோடி பேருக்கு எங்கே போவது' என கேட்கின்றனர்.

எனவே, செயல்படாத மாவட்டத் தலைவர்கள் பதவி பறிக்கப்படும் என்றும், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இதுவரை எத்தனை பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது என்ற விபரத்தை சேகரித்து தரும்படி, ஐந்து கோஷ்டி தலைவர்களுக்கும், டில்லி மேலிடம் உத்தர விட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us