கொலை மிரட்டல் வருகிறது பழனிசாமி ஆதரவாளர் புகார்
கொலை மிரட்டல் வருகிறது பழனிசாமி ஆதரவாளர் புகார்
கொலை மிரட்டல் வருகிறது பழனிசாமி ஆதரவாளர் புகார்
ADDED : செப் 09, 2025 03:59 AM

சேலம் : செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மிரட்டியதாக, பழனிசாமி ஆதரவாளர் போலீசில் புகார் அளித்தார்.
அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்குமாறு வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, கட்சி பொறுப்புகளில் இருந்து கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நீக்கியுள்ளார்.
இதையடுத்து, செங்கோட்டையன் ஆதரவாளர்கள், அவரது வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், சேலம் நிலவாரப்பட்டியைச் சேர்ந்தவரும், பழனிசாமி ஆதரவாளருமான வக்கீல் மணிகண்டன் என்பவர், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார். சேலம் எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று அவர் அளித்த புகார் மனு:
கடந்த, 2011ல் அ.தி.மு.க.,வில் இணைந்து, ஊடகங்கள் மற்றும், யு - டியூப் சேனல்களில் அரசியல் நிகழ்வு குறித்து பேசி வருகிறேன்.
சில தினங்களுக்கு முன், யு - டியூப் சேனலில், செங்கோட்டையன் குறித்து கருத்து தெரிவித்து இருந்தேன். இந்நிலையில் கடந்த, 5ம் தேதி, தொலைபேசியில் சிலர் என்னை தொடர்பு கொண்டு, தகாத முறையில் பேசினர்.
மேலும், 'வீட்டுக்கு வந்து வெட்டி கொலை செய்வோம். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டிலும் குண்டு வீசுவோம்' என்றனர்.
இவர்கள், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் என தெரிகிறது. எனவே, இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.