முதல்வரிடம் கொடுத்த 9391 மனுக்கள் 255க்கு தீர்வு என அதிகாரிகள் தகவல்
முதல்வரிடம் கொடுத்த 9391 மனுக்கள் 255க்கு தீர்வு என அதிகாரிகள் தகவல்
முதல்வரிடம் கொடுத்த 9391 மனுக்கள் 255க்கு தீர்வு என அதிகாரிகள் தகவல்
ADDED : செப் 15, 2025 01:47 AM

சென்னை: மாவட்டங்களில் நடந்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டங்களில், முதல்வரிடம் பொது மக்கள் நேரடியாக கொடுத்த 9,391 மனுக்களில், 255 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் நிலவரம் குறித்து, உயரதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில், பொது மக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கின்றனர்.
அவற்றின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், அதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, மக்கள் நினைக்கின்றனர்.
இதற்காக, தலைமைச் செயலகத்தில், 'முதல்வரின் முகவரி' என்ற பெயரில், ஒரு துறை ஏற்படுத்தப்பட்டு, பொது மக்களின் மனுக்கள் பெறப்படுகின்றன. இதன் மீது, பல்வேறு துறையினர் எடுக்கும் நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது.
ஆய்வுக் கூட்டம் இந்நிலையில், அரசு திட்டங்களை துவக்கி வைக்க, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் செல்கிறார். அப்போது மக்கள் முதல்வரிடம் நேரில் மனு அளிக்கின்றனர்.
இது மட்டுமல்லாது, கடந்த இரண்டு ஆண்டுகளாக, முதல்வர் ஒரு மாவட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்துச் சென்று, மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்.
அப்போதும் முதல்வரிடம் மக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்கள், தனியாக தொகுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளிடம் விளக்கம் கேட்கப்படுகிறது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், மண்டல அளவிலான ஆய்வு கூட்டங்களுக்கு முதல்வர் சென்ற போது, பொது மக்களிடம் இருந்து, 9,391 மனுக்கள் பெறப்பட்டன. அவை, பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டன.
அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துறை தலைமை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தற்போது வரை, 255 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக அதிகாரிகள் விளக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், 5,570 மனுக்கள் தொடர்பான பணிகள் வகைப்படுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் உள்ளன. பணிகளை விரைந்து முடிந்து நிறைவு அறிக்கையை தாக்கல் செய்ய, துறை தலைமை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.