கைலாசத்தில் இருக்கிறார் நித்யானந்தா உயர்நீதிமன்றத்தில் தகவல்
கைலாசத்தில் இருக்கிறார் நித்யானந்தா உயர்நீதிமன்றத்தில் தகவல்
கைலாசத்தில் இருக்கிறார் நித்யானந்தா உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : ஜூன் 19, 2025 11:55 PM
மதுரை:மதுரை ஆதினம் மடத்திற்குள் நுழையக்கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக நித்யானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையின் போது அவர் கைலாசத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவரது தரப்பில் வேறு வழக்கறிஞர் ஆஜராக விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு ஒத்திவைத்தது.
மதுரையைச் சேர்ந்த ஜெகதலப்பிரதாபன், ''மதுரை ஆதினம் மடத்தின் 292 வது மடாதிபதியாக அருணகிரிநாதர் இருந்தார். திருவண்ணாமலை மற்றும் பிடதியில் தியான பீடம் நடத்திய நித்யானந்தா தன்னை மதுரை ஆதினம் மடத்தின் 293 வது மடாதிபதியாக 2012 ல் அறிவித்தார். பின் மடத்திலிருந்து வெளியேறினார். மதுரை ஆதினம் மடம் நிர்வாகத்திற்குள் நித்யானந்தா எவ்விதத்திலும் தலையீடு செய்ய, மடத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்,'' என, 2017ல் மனு செய்தார்.
தனிநீதிபதி, ''மதுரை ஆதினம் மடம் மற்றும் அதற்கு கீழ் உள்ள கோயில்களுக்குள் நித்யானந்தா நுழையக்கூடாது,'' என, 2018 மார்ச் 5 ல் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து நித்யானந்தா 2018 ல் மேல்முறையீடு செய்தார். 2018 மே 30 ல் இரு நீதிபதிகள் அமர்வு,'தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டது.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது.
நித்யானந்தா தரப்பில் அர்ச்சனா என்பவர் ஆஜரானார். அவர் கூறியதாவது: வழக்கில் வேறு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட அவகாசம் தேவை என மனுதாரர் தரப்பில் எனக்கு அறிவுறுத்தப்பட்டது. 2 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
நீதிபதிகள்: வழக்கு தாக்கல் செய்த மனுதாரர் (நித்யானந்தா) எங்கு உள்ளார்
அர்ச்சனா: கைலாசத்தில் உள்ளார்.
நீதிபதிகள்: அது எங்குள்ளது.
அர்ச்சனா: ஆஸ்திரேலியா அருகே உள்ளது. கைலாசத்தை ஐ.நா.,அங்கீகரித்துள்ளது. அங்கு செல்ல பாஸ்போர்ட், விசா வழங்கப்படுகிறது. அதற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்ய தயார்.இவ்வாறு விவாதம் நடந்து.
நீதிபதிகள் 2 வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தனர்.


