UPDATED : மே 05, 2026 05:13 AM
ADDED : மே 05, 2026 04:26 AM

- நமது நிருபர் -
த.வெ.க., அலையில், தி.மு.க.,வில் அமைச்சர்களும் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
இதுதொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் விஜய் அலை சுனாமி போல் வீசி விட்டது.
முதல்வர் ஸ்டாலினையும், அது விட்டு வைக்கவில்லை. சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், முத்துசாமி, சாமிநாதன், காந்தி, தா.மோ.அன்பரசன், மூர்த்தி, மதிவேந்தன், தியாகராஜன், மகேஷ், நாசர், மா.சுப்பிரணியன், கீதா ஜீவன், டி.ஆர்.பி.ராஜா, ராஜேந்திரன் உள்ளிட்டோரையும் வீழ்த்தி விட்டது.
மூத்த அமைச்சர்களை தொகுதி மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொகுதிக்கு புதுமுகம் தேவை என்ற அடிப்படையில், த.வெ.க., வேட்பாளர்களை வெற்றி பெற வைத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக மாவட்ட செயலர் பதவி வகித்து, கட்சியில் கோலோச்சி அமைச்சர்களாக இருந்த சிலரும் படுதோல்வி அடைந்துள்ளனர்.
ஆடிக்காற்றில் அம்மிக்கல்லே பறக்கும்போது, அதாவது எங்கள் முதல்வரே தோற்கும்போது, இவர்கள் எம்மாத்திரம்? அதனால், அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை.
இனி கட்சியில் சீரமைப்பு நடவடிக்கைகள் துவக்கும்போது, கட்சியில் கோலோச்சிய இவர்களின் ஆதிக்கம் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
