Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ரூ.199க்கு அதிவேக இணைய சேவை அமைச்சர் தியாகராஜன் தகவல்

ரூ.199க்கு அதிவேக இணைய சேவை அமைச்சர் தியாகராஜன் தகவல்

ரூ.199க்கு அதிவேக இணைய சேவை அமைச்சர் தியாகராஜன் தகவல்

ரூ.199க்கு அதிவேக இணைய சேவை அமைச்சர் தியாகராஜன் தகவல்

ADDED : அக் 10, 2025 12:08 AM


Google News
சென்னை:''நாளை நடக்க உள்ள கிராம சபை கூட்டங்களில், 'பாரத் நெட் - டான் பி நெட்' அதிவேக இணைய சேவையை பயன்படுத்தி, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார்,'' என, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

மத்திய அரசு, 'பாரத் நெட்' எனும் திட்டத்தை, 2014- - 19ம் காலகட்டத்தில் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தை, மாநில அரசு செயல்படுத்த, அ.தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 3,000 கோடி ரூபாய்க்கு, 'டெண்டர்' கோரப்பட்டது.

அதில், சட்ட சிக்கல்கள் ஏற்பட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, டெண்டர் விபரங்கள் சரி செய்யப்பட்டு, 2022ம் ஆண்டு, 'பாரத் நெட்' மற்றும் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் பங்களிப்புடன், தமிழகத்தில், 12,525 ஊராட்சிகளுக்கு, அதிவேக இணைய சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுவரை 11,800 ஊராட்சிகளுக்கு, கண்ணாடி இழை கம்பி வடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் இணைய சேவை வழங்க, ஊராட்சிக்கு இருவருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், குறைந்த அளவே விண்ணப்பங்கள் வந்தன. அதிவேக இணைய சேவை செயல்பாட்டில் சில பிரச்னைகள் உள்ளன.

டில்லியில் நேற்று முன்தினம் நடந்த, இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று, திட்டத்துக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும், அதிவேக இணைய சேவைக்கான நிர்வாகத்தை, மாநில அரசே மேற்கொள்ள வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

தமிழகத்தில், 'பாரத் நெட் - டான் பி நெட்' இணைய சேவை வழியே, முதல் முறையாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, 10,000 ஊராட்சிகளில் நாளை நடக்கும் கிராமசபை கூட்டங்களில், முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார்.

விரைவில், நிலுவை யில் உள்ள பணிகள் முடிக்கப்பட்டு, 199 ரூபாய் கட்டணத்தில் கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us