மின் கட்டண உயர்வு கிடையாது அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்
மின் கட்டண உயர்வு கிடையாது அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்
மின் கட்டண உயர்வு கிடையாது அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்
ADDED : ஜூன் 30, 2025 01:47 AM

சென்னை: 'வீட்டு மின் இணைப்புகளுக்கு, எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும்' என, மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அரசு வெளியிட்ட அறிக்கை:
மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், வீட்டு மின் இணைப்புகளுக்கு, எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என, மே, 20ம் தேதி விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும், மின் கட்டணம் குறித்து, மறுபடியும் வதந்திகள் பரவி வருவதால், இதுகுறித்து மீண்டும், அரசின் சார்பில் தெளிவுப்படுத்தப்படுகிறது.
தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்படவில்லை.
முதல்வரின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்கு முறை ஆணையம், மின் கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதை நடைமுறைப்படுத்தும் போது, வீட்டு மின் நுகர்வோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், எந்த ஒரு மின் கட்டண உயர்வும் இருக்காது.
தற்போது வழங்கப்படும், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும், தொடர்ந்து வழங்கப்படும் என, அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.