நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு ரூ.2,465 கோடியில் 96 திட்ட பணிகளும் துவக்கம்
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு ரூ.2,465 கோடியில் 96 திட்ட பணிகளும் துவக்கம்
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு ரூ.2,465 கோடியில் 96 திட்ட பணிகளும் துவக்கம்
ADDED : பிப் 25, 2024 01:47 AM

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில், 1,517 கோடி ரூபாயில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அத்துடன், 948.18 கோடி ரூபாயில் முடிவடைந்த 95 திட்டப் பணிகளையும் துவக்கி வைத்தார்.
நெம்மேலி நிலையத்திலிருந்து பெறப்படும்சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, பொது மக்களுக்கு வினியோகம் செய்வதற்காக, 48.10 கி.மீ., நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகளும், சோழிங்கநல்லுாரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன.
9 லட்சம் மக்கள்
இங்கிருந்து வழங்கப்படும் குடிநீர் வாயிலாக வேளச்சேரி, ஆலந்துார், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லுார், உள்ளகரம் - புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பல்லாவரம், பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவன பகுதிகள் என, ஒன்பது லட்சம் மக்கள் பயன் அடைவர்.
அத்துடன், சென்னை பெருநகர் குடிநீர் வாரியம் சார்பில், 129.50 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்ட, ஏழு திட்டப் பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, பெரம்பலுார், தேனி, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில், ஒரு நகராட்சி, இரண்டு பேரூராட்சிகள், 1,219 ஊரக குடியிருப்புகள் பயன் பெறும் வகையில், மூன்று தனி குடிநீர் திட்டங்கள், ஆறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள், தமிழக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 315.98 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி பயன் பெறும் வகையில், 217.13 கோடி ரூபாயில் இரண்டு பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன; இவற்றையும் முதல்வர் துவக்கிவைத்தார்.
அதேபோல், நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சார்பில், 172.34 கோடி ரூபாயிலான 52 பணிகள்; பேரூராட்சி இயக்ககம் சார்பில், 33.02 கோடி ரூபாய் செலவிலான 12 பணிகள்.
சென்னை மாநகராட்சி சார்பில், 70.79 கோடி ரூபாயில் நடந்த பணிகள் என, மொத்தம் 2,465 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ள 96 திட்டப் பணிகளை, முதல்வர் துவக்கி வைத்தார்.
அடிக்கல்
சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், பல ஆண்டுகளாக கொட்டப்பட்டுள்ள குப்பையை, 648.38 கோடி ரூபாய் செலவில் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் பிரித்தெடுத்து, நிலத்தை மீட்டெடுக்கும் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இதேபோல, சென்னை குடிநீர் வாரியம் சார்பில், 101.26 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள மூன்று புதிய திட்டங்கள்; நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சார்பில், 813.85 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ள 23 திட்டப் பணிகள்.
பேரூராட்சிகள் இயக்ககம் சார்பில், 238.93 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் என, மொத்தம் 1,802.36 கோடி ரூபாய் மதிப்பில், 39 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின்அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, வேலு,அன்பரசன், சென்னை மேயர் பிரியா பங்கேற்றனர்.