கர்ப்பிணியை ஓடும் பஸ்சிலிருந்து மிதித்து கொன்ற கணவன் கைது
கர்ப்பிணியை ஓடும் பஸ்சிலிருந்து மிதித்து கொன்ற கணவன் கைது
கர்ப்பிணியை ஓடும் பஸ்சிலிருந்து மிதித்து கொன்ற கணவன் கைது
ADDED : ஜன 28, 2024 11:52 PM

நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் -நத்தம் அருகே காதலித்து திருமணம் செய்த 17 வயது கர்ப்பிணியை ஓடும் பஸ்சிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவரை சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.
நத்தம் வேம்பார்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டி 24. இவருக்கும் நத்தம் கல்வேலிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மகள் வளர்மதிக்கும் 17, பழக்கம் ஏற்பட்டது. 8 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் வளர்மதி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். பாண்டிக்கு மது பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு நத்தம் அருகே உள்ள வளர்மதியின் தந்தை வீட்டிற்கு வேம்பார்பட்டியிலிருந்து பாண்டி, வளர்மதி இருவரும் அரசு பஸ்சில் சென்றனர். அப்போது பாண்டி போதையில் இருந்ததால் மனைவியுடன் தகராறு செய்தார்.
பஸ் எஸ்.கொடை பகுதியில் சென்ற போது பாண்டி மனைவியை ஓடும் பஸ்சிலிருந்து கீழே தள்ளிவிட்டார். அக்கம்பக்கத்தினர் வளர்மதியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார். இன்ஸ்பெக்டர் முனியசாமி, எஸ்.ஐ., சிவராஜா மற்றும் போலீசார் விசாரித்து பாண்டியை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் போதையில் இருந்த பாண்டி எட்டி உதைத்ததில் வளர்மதி இறந்தது தெரிந்தது.