வீட்டு மின் கட்டணம் உயராது; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
வீட்டு மின் கட்டணம் உயராது; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
வீட்டு மின் கட்டணம் உயராது; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: ' தமிழகத்தில் வீட்டு மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இருக்கக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்,'' என தமிழக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜூலை முதல் மின்சார கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக தமிழக மின்சார வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை வாரியம் பரிந்துரை செய்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டது.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தற்போது மின் கட்டண உயர்வு குறித்து எவ்விதஉத்தரவும் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை. எனினும் ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பான உத்தரவு வழங்கினால், அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது. தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடர வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் சிவசங்கர் கூறியுள்ளார்.