விதிமீறல் ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய விதிகளில் திருத்தம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
விதிமீறல் ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய விதிகளில் திருத்தம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
விதிமீறல் ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய விதிகளில் திருத்தம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:போக்குவரத்து விதிகளை மீறி பாதசாரிகள், பிற வாகன ஓட்டிகளை பீதியடையச் செய்யும் வகையில் ஆபத்தான முறையில் ஷேர் ஆட்டோக்கள் ஓட்டுவதை ஒழுங்குபடுத்த,உரிமத்தை ரத்து செய்ய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
செல்லப்பாண்டியன் என்பவர் குடிபோதையில் ஷேர் ஆட்டோவை 10க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வேகமாக, அலட்சியமாக மதுரை- கமுதி மெயின் ரோடு பசும்பொன் அருகே 2015ல் ஓட்டிச் சென்றார். போலீஸ் வேன் மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. மூன்று பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். சிலர் காயமடைந்தனர். கமுதி போலீசார் வழக்கு பதிந்தனர். செல்லப்பாண்டியனுக்கு 2019ல் பரமக்குடி நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்: குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களை குறிப்பாக ஷேர் ஆட்டோ விஷயத்தில் இலகுவாக கையாள முடியாது. ஆட்டோ டிரைவர்கள் அவசரமாக ஓட்டுவதுடன் சாலையின் நடுவில் திடீரென நிறுத்துகின்றனர். 'ஜிக் ஜாக்' முறையில் ஓட்டுகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதை தீவிரமானதாக பார்க்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டும்போது எந்த அனுதாபமும் காண்பிக்கக்கூடாது.
ஷேர் ஆட்டோக்களில் அதிக நபர்களை ஏற்றிச் செல்வதை தடுக்க சோதனையிடுமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு இந்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்களுக்கு எதிரான விபத்து வழக்குகள், விதிகளை மீறி அதிக பயணிகள், சரக்குகளை ஏற்றியதாக 2008-2024 வரை பதிவான வழக்குகளின் விபரங்களை அரசு தரப்பு தாக்கல் செய்தது.
அதன்படி 354 விபத்து மரண வழக்குகள், விபத்தினால் ஏற்பட்ட காயம் தொடர்பாக 2290 வழக்குகள், அதிக பயணிகளுடன் இயக்கியதற்காக 50 ஆயிரத்து 312, அதிக சரக்குகளை ஏற்றியதற்காக 2821, போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4 லட்சத்து 77 ஆயிரத்து 600 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இவ்விபரங்கள் கவலையளிக்கும் வகையில் உள்ளன. ஆனால், இந்த அபாயகரமான விதிமீறல் விளைவாக ஏற்படும் மனித உயிரிழப்புகளை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோ டிரைவர்களின் சட்டவிரோதச் செயலை தடுக்க வேண்டும்.
போக்குவரத்து விதிகளை மீறி பாதசாரிகள், பிற வாகன ஓட்டிகளை பீதியடையச் செய்யும் வகையில் ஆபத்தான முறையில் ஷேர் ஆட்டோக்களை ஓட்டுவதை ஒழுங்குபடுத்த, தமிழக போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலருக்கு இந்நீதிமன்றம் கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை பிறப்பிக்கிறது.
ஷேர் ஆட்டோவின் உரிமத்தை ரத்து செய்ய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக நபர்களுடன் ஆபத்தான முறையில் ஓட்டினால், ஷேர் ஆட்டோவை பறிமுதல் மற்றும் முடக்கம் செய்வதற்கு விதியை உருவாக்க வேண்டும்.
இவ்வழக்கு மனுதாரர் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதை வெளிப்படுத்தும் பொதுவான வழக்கு. அவர் மக்களின் பாதுகாப்பை முற்றிலும் புறக்கணித்து செயல்பட்டுள்ளார். அவர் எந்த தண்டனை குறைப்பிற்கும் தகுதியற்றவர். கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.