கொடிக்கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
கொடிக்கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
கொடிக்கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஜூன் 21, 2025 04:49 AM
மதுரை: தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை அ.தி.மு.க., நிர்வாகி கதிரவன்,'பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ஜெயம் தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கு அ.தி.மு.க.,கொடிக் கம்பம் நட அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்,' என மனு தாக்கல் செய்தார். இதுபோல் மேலும் சில மனுக்கள் தாக்கலாகின. ஜன., 27 ல் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 'அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்,' என உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனர் அம்மாவாசிதேவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதை மார்ச் 6 ல் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.
இதை மறு சீராய்வு செய்ய மனு தாக்கல் செய்ய அனுமதிக்க மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மனு தாக்கல் செய்தார். தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இரு மனுக்களும் நிலுவையில் உள்ளன.
சண்முகம்,'மதுரை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்,' என மற்றொரு மனு செய்தார். நீதிபதி சி.சரவணன் தள்ளுபடி செய்தார்.