Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

ADDED : ஜூன் 11, 2025 01:18 AM


Google News
சென்னை:'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில், 10 மாவட்டங்களில் ஒருசில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை மணலியில் 8 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, பெரம்பலுாரில் 7; மயிலாடுதுறையில் கொள்ளிடம், கடலுார் மாவட்டம் பெலாந்துறை, லால்பேட்டை, கொத்தவாச்சேரியில், தலா 6 செ.மீ., மழை பெய்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறு, திருவிடைமருதுார், அணைக்கட்டு, கடலுார் மாவட்டம் விருத்தாசலம், குப்பநத்தம் ஆகிய இடங்களில், தலா 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் வட மாவட்டங்களில் அநேக இடங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலை, ஜூன் 16 வரை தொடர வாய்ப்புள்ளது.

திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலுார், அரியலுார், மயிலாடுதுறை மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகலில் அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாலையில் மழை ஏன்?


பொதுவாக கோடை காலத்தில் பகலில் வெப்பம் அதிகரிக்கும் போது, மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச்சலன மழை பெய்யும். பகலில் நிலப்பரப்பு அதிகமாக வெப்பமடைவதால், சூடான காற்று மேலே எழும்புகிறது. வெப்பக்காற்று மேலே எழும் போது, மேகங்களில் இருக்கும் நீர்த்துளிகள் மழையாக பெய்வதே, வெப்பச்சலன மழை என, வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து, தன்னார்வ வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியதாவது:தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், பகலில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால், முதல் சுற்று வெப்பச்சலன மழை துவங்கி உள்ளது. பலத்த தரைக்காற்று, இடி மின்னலுடன் வெப்பச்சலன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி, நான்கு நாட்களுக்கு வெப்பச்சலன மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us