சித்திரை மாதத்தில் பிறந்ததால் ஆண் குழந்தையை கொன்ற தாத்தா கைது
சித்திரை மாதத்தில் பிறந்ததால் ஆண் குழந்தையை கொன்ற தாத்தா கைது
சித்திரை மாதத்தில் பிறந்ததால் ஆண் குழந்தையை கொன்ற தாத்தா கைது
ADDED : ஜூன் 18, 2024 03:36 AM

பெரம்பலுார் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சுந்தரபெருமாள் கோவில், வடக்கு வீதியைச் சேர்ந்த பாலமுருகன்-, 35, என்பவருக்கும், அரியலுார் மாவட்டம், உட்கோட்டை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வீரமுத்து மகள் சங்கீதா, 31, என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.
கருவுற்றிருந்த சங்கீதா பிரசவத்துக்காக தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்கு 38 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது; சாத்விக் என பெயரிட்டனர்.
கடந்த 14ம் தேதி அதிகாலை சங்கீதா தன் குழந்தைக்கு பால் கொடுத்து துாங்க வைத்து விட்டு அவரும் துாங்கினார். சிறிது நேரம் கழித்து சங்கீதா எழுந்து பார்த்த போது, குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
சங்கீதாவின் பெற்றோர், வீட்டின் பின்புறம் தண்ணீர் நிரப்பிய பேரலில் பார்த்த போது, போர்வையுடன் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஜெயங்கொண்டம் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரித்ததில், 'சித்திரை மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால், குடும்பத்துக்கு ஆகாது. தாயின் அப்பாவின் உயிருக்கு ஆபத்து' என ஊரில் சிலர் கூறியதாக தெரிகிறது.
இதனால், குழந்தையை கொலை செய்ய திட்டமிட்ட வீரமுத்து, சம்பவத்தன்று துாங்கிக்கொண்டிருந்த குழந்தையை துாக்கிச் சென்று தண்ணீர் நிரம்பிய பேரலில் போட்டு மூடிவிட்டு வந்து, ஒன்றும் தெரியாதது போல வீட்டில் படுத்துக்கொண்டார்.
சிறிது நேரத்தில் துாங்கி விழித்ததுபோல படுக்கையில் இருந்து எழுந்து, 'குழந்தையை காணவில்லை' என வீரமுத்து நாடகமாடியுள்ளார். இது குறித்து, ஜெயங்கொண்டம் போலீசார், வழக்கு பதிந்து வீரமுத்துவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.