Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையால் பயனில்லை; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையால் பயனில்லை; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையால் பயனில்லை; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையால் பயனில்லை; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

ADDED : ஜூன் 01, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
திருப்பூர் : ''மத்திய அரசு, வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் போது, மாநிலங்களின் உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு, மாநிலங்கள் வாரியாக விலை நிர்ணயம் அறிவிக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:


தமிழக அரசின் புள்ளி விவரப்படி, ஒரு ஏக்கரில் நெல் பயிரிட சராசரி உற்பத்தி செலவு, 36 ஆயிரம் ரூபாய். ஒரு ஏக்கருக்கு சராசரியாக இரண்டு டன் நெல் விளைகிறது. கடந்த, 2024 - 2025க்கு பின், மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதார விலையாக, குவின்டாலுக்கு, 2,300 ரூபாய் நிர்ணயம் செய்தது. நடப்பாண்டு, 69 ரூபாய் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, கிலோவுக்கு, 69 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஆதார விலையுடன், தமிழக அரசு, குவின்டாலுக்கு, 105 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்குகிறது. இதன் வாயிலாக, தமிழக விவசாயிகளுக்கு, குவின்டாலுக்கு, 2,474 ரூபாய் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். நெல் அறுவடையில், விவசாயி, அவர் சொந்த நிலத்தில், 90 நாட்கள் உழைக்க வேண்டியுள்ளது; அதற்கான கூலி, விவசாயிகளுக்கான லாபம் என எதுவும் விலை நிர்ணய அறிவிப்பில் சேர்க்கப்படுவதில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைப்படி, உற்பத்தி செலவுடன், 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்பாடியாகும் விலை கிடைக்கும்.

நெல் உற்பத்தியை பொறுத்தவரை, கடந்த, 2001ம் ஆண்டு முதல், 3 ஆண்டுகளை தவிர்த்து, 22 ஆண்டுகள் நஷ்டத்தையே எதிர்கொண்டுள்ளனர் என்பதும் அரசின் புள்ளி விபரம். எனவே, மத்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலை, விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பலன் தராது. ஒடிசா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையுடன், மாநில அரசுகள், குவின்டாலுக்கு, 800 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகின்றன.

ஆனால், தமிழக அரசு, 105 ரூபாய் மட்டுமே வழங்குவதால், தமிழக நெல் விவசாயிகளின் நிலை மோசமாகவே உள்ளது. எனவே, மத்திய அரசின் ஒரே மாதிரியான விலை நிர்ணயம், தமிழக விவசாயிகளுக்கு பயனளிப்பதில்லை. எனவே, மத்திய அரசு, வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதை, மாநிலங்களின் உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு, மாநிலங்கள் வாரியாக நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us