போதைப்பொருள் கடத்தல் வழக்கு 4 ஆண்டில் 2,117 பேருக்கு குண்டாஸ்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு 4 ஆண்டில் 2,117 பேருக்கு குண்டாஸ்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு 4 ஆண்டில் 2,117 பேருக்கு குண்டாஸ்
ADDED : ஜூன் 03, 2025 04:46 AM

சென்னை : தமிழகத்தில் நான்கு ஆண்டுகளில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் சிக்கிய 107 பெண்கள்; 2,010 ஆண்கள் என, 2,117 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மாநிலம் முழுதும் நடக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுடன் இணைந்து, இ.பி., - சி.ஐ.டி., எனப்படும், அமலாக்கப் பணியக குற்றப்புலனாய்வு துறை செயல்பட்டு வருகிறது.
இப்பிரிவினர் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனை செய்வதை தடுத்தல் போன்ற பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணிக்காக, உளவு தகவல்களை சேகரிக்க போலீசாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், போதைப் பொருள் குறித்து, 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைத்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க, சென்னை எழும்பூரில், இ.பி., - சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில் காவல் கட்டுப் பாட்டு அறையும் செயல்படுகிறது.
அத்துடன், 94984 10581 என்ற, 'வாட்ஸாப்' எண்ணிலும் புகார் பதிவு செய்யலாம். அந்த வகையில், கடந்தாண்டு, 2,773 பேர் புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக, இ.பி., - சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
மாநிலம் முழுதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க, நிரந்தர சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 45 சோதனை சாவடிகளில், 'சிசிடிவி கேமரா'க்களும் பொருத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக, நான்கு ஆண்டுகளில், 107 பெண்கள்; 2,010 ஆண்கள் என, 2,117 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.