தேனி அ.தி.மு.க., அலுவலகத்தை அ.ம.மு.க., கைப்பற்றியதா?
தேனி அ.தி.மு.க., அலுவலகத்தை அ.ம.மு.க., கைப்பற்றியதா?
தேனி அ.தி.மு.க., அலுவலகத்தை அ.ம.மு.க., கைப்பற்றியதா?
ADDED : ஜன 03, 2024 01:27 AM
தேனி:தேனி மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் தேனி - போடி ரோடு ஆர்.எம்.டி.சி. காலனி அருகே அமைந்துள்ளது.
கட்சி அலுவலகங்கள் எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை வசம் உள்ளன.
அறக்கட்டளை நிர்வாகத்தில் சசிகலா முக்கிய பொறுப்பில் இருந்தாலும், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன், அவற்றை நிர்வகித்தார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க.,வில் பல மாற்றங்கள் ஏற்பட்டு தற்போது பொதுச்செயலராக பழனிசாமி உள்ளார்.
இதற்கிடையில், சசிகலா, அறக்கட்டளையை தன்வசப்படுத்தினார்.
கட்சி அலுவலகம் சசிகலாவிடம் வந்தபின், தேனி அ.தி.மு.க., அலுவலகத்தில், அ.தி.மு.க., - அ.ம.மு.க., என இரு தரப்பினரும் 'கூட்டம் நடத்துவோம்' எனக் கூறியதால் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, 'யாரும் அந்த அலுவலகத்துக்குச் செல்லக்கூடாது' என போலீசார் தடை விதித்தனர்.
முன்னதாக கட்சி அலுவலக பராமரிப்பை பன்னீர்செல்வம் செய்து வந்தார் ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.ம.மு.க., மாவட்டச் செயலர்கள் பராமரித்தனர்.
அ.ம.மு.க., சார்பில் இதுவரை ஏழு ஆலோசனை கூட்டங்கள், அந்த இடத்தில் நடத்தப்பட்டு உள்ளன. நேற்றும் லோக்சபா தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அ.ம.மு.க., மாவட்டச் செயலர்கள் முத்துச்சாமி, காசிமாயன் கூறுகையில், ''இரண்டு ஆண்டுகளாக, சம்பந்தப்பட்ட அலுவலகத்தை நாங்கள் தான் பராமரித்து வருகிறோம். அதன் காரணமாகவே கூட்டங்களை நடத்துகிறோம். எங்களிடம் ஆர்.டி.ஓ., உத்தரவும் உள்ளது'' என்றனர்.
அ.தி.மு.க., தெற்கு மாவட்டச் செயலர் ஜக்கையன் கூறுகையில், ''கூட்டம் நடத்தினரா, இது குறித்த எந்தத் தகவலும் எங்களுக்கு இதுவரை இல்லை. இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்,'' என்றார்.