பதவி உயர்ந்தும் 4 ஆண்டுகளாக சம்பளம் உயரல.. 3 ஆயிரம் கல்லுாரி ஆசிரியர்கள் கொதிப்பு
பதவி உயர்ந்தும் 4 ஆண்டுகளாக சம்பளம் உயரல.. 3 ஆயிரம் கல்லுாரி ஆசிரியர்கள் கொதிப்பு
பதவி உயர்ந்தும் 4 ஆண்டுகளாக சம்பளம் உயரல.. 3 ஆயிரம் கல்லுாரி ஆசிரியர்கள் கொதிப்பு
ADDED : மார் 14, 2025 01:51 AM

மதுரை : பதவி உயர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இதுவரை அதற்கான சம்பள உயர்வை வழங்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருவதாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிபெறும் கல்லுாரி ஆசிரியர்கள் கொதிப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் 130க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அரசு, உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு அவர்கள் பணிக்காலம் அடிப்படையில் இணை பேராசிரியர், பேராசிரியர் பதவி உயர்வு அளிக்க 2021ல் அ.தி.மு.க., ஆட்சி கடைசியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை அரசு கல்லுாரிகளில் செயல்படுத்தி, பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் செயல்படுத்தவில்லை. இதுகுறித்து பல்வேறு போராட்டங்களுக்கு பின் உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான உத்தரவு மட்டும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான சம்பள உயர்வு இதுவரை வழங்கவில்லை. குறிப்பாக 2007 க்கு பின் பணியில் சேர்ந்த பலர் சம்பள உயர்வின்றி பணியாற்றுகின்றனர்.
இதை கண்டித்து மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடத்த பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளவர்.
இதுகுறித்து 'மூட்டா' பொதுச் செயலாளர் நாகராஜன் கூறியதாவது:
'இனிப்பு' என பேப்பரில் எழுதிக்கொடுத்தால் மட்டும் இனிக்குமா. அதுபோல் தான் உயர்கல்வித்துறை செயல்பாடு உள்ளது. பதவி உயர்வு குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை சம்பளம் உயர்த்தப்படவில்லை. அரசு கல்லுாரி ஆசிரியர்களுக்கு அரியருடன் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கோவை, தஞ்சை மண்டல கல்லுாரிக் கல்வி இயக்குநர்கள் (ஆர்.ஜே.டி.,) தங்களுக்கு கீழ் உள்ள உதவிபெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கியுள்ளனர்.
ஒரே உத்தரவு என்றாலும் ஆர்.ஜே.டி.,கள் உரிய முறையில் பின்பற்றாமல் உதவிபெறும் கல்லுாரி ஆசிரியர்களை வதைக்கின்றனர். இதனால் மாதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஆசிரியர்களுக்கு சம்பள இழப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண இதுவரை 20க்கும் மேற்பட்ட போராட்டம், மறியல் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை.
மதுரையில் நாளை (மார்ச் 15) மீண்டும் மறியல் நடக்கிறது. பேராசிரியர்கள் மனஉளைச்சலை தீர்க்க அரசு முன்வர வேண்டும் என்றார்.