Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதில் தாமதம்: 5 மாவட்டங்களில் இன்று கனமழை

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதில் தாமதம்: 5 மாவட்டங்களில் இன்று கனமழை

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதில் தாமதம்: 5 மாவட்டங்களில் இன்று கனமழை

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதில் தாமதம்: 5 மாவட்டங்களில் இன்று கனமழை

ADDED : அக் 23, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, புதுச்சேரி பெரிய காலாப்பேட்டையில் 25 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக புதுச்சேரி டவுன், 21; பாகூர் 19; விழுப்புரம் மாவட்டம் வானுார், கடலுார் தலா, 18; விழுப்புரம் மாவட்டம் வல்லம், விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, கடலுார் மாவட்டம் கொத்தவாச்சேரி, வனமாதேவியில் தலா, 17 செ.மீ., மழை பெய்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை நிலவரப்படி, தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவியது. இது, இன்று வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு, ஏற்கனவே எதிர்பார்த்தபடி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையாததால், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 'ரெட் அலர்ட்' திரும்ப பெறப்பட்டது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அதே பகுதியில் நிலவுகிறது.

தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 26 முதல் கனமழை பெய்யும் மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். தமிழக வட கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபி கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம், கேரள பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் தற்போது நிலவும் சூழலால், தமிழகம் மற்றும் இலங்கையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, பி.பி.சி., செய்தி நிறுவனம் தெரி வித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us