Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோவில்களில் உழவாரப்பணி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கோவில்களில் உழவாரப்பணி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கோவில்களில் உழவாரப்பணி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கோவில்களில் உழவாரப்பணி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

ADDED : பிப் 23, 2024 11:31 PM


Google News
சென்னை:'தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில் உழவாரப்பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை, இரண்டு வாரத்துக்குள் வகுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 'பழமையான, பாரம்பரியம் மிக்க கோவில்களில், துாய்மைப் பணிகள் மற்றும் பொதுமக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது' எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரான கே.கார்த்திக்கேயன், ''பொதுமக்கள், தன்னார்வலர்கள் உழவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பம் செய்தால், அதற்கான அனுமதியை, சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்கள் வழங்குவதில்லை,'' எனக்கூறி, மருதாநல்லுார் திருக்கருங்குடிநாதர் மற்றும் மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில்கள், அங்குள்ள தெப்பக்குளங்கள், பராமரிப்பின்றி பாழடைந்து இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.

அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''உழவாரப் பணிகளுக்கு அனுமதி கோரி, சம்பந்தப்பட்ட கோவில்களில் விண்ணப்பம் செய்தால், அதை பரிசீலித்து செயல் அலுவலர் அனுமதி வழங்குவார். கோவில்களில் துாய்மைப் பணிகளுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிப்பதில்லை,'' என்றார்.

பின், மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், 'தமிழகத்தில் உள்ள கோவில்களில், 65 சதவீத கோவில்களில் சரிவர பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. 'பாரம்பரிய, பழமையான கோவில்கள் பராமரிப்பின்றி இருப்பது குறித்து, அரசும் கவலை கொள்வதில்லை' என, வேதனை தெரிவித்தனர்.

பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மாநிலம் முழுதும் உள்ள கோவில்களில், பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கும் வகையில், உழவாரப் பணிகள் மேற்கொள்ள, இரண்டு வாரத்தில் திட்டத்தை வகுக்க வேண்டும்.

மாநிலத்தில் உள்ள 189 தேவார வைப்புத் தலங்கள், 267 நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்கள், 84 ஆழ்வார்கள் பாடல் பெற்ற திவ்ய தேசங்களை ஆய்வு செய்ய, மாவட்ட கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., அல்லது பி.டி.ஓ., தலைமையில் குழு அமைத்து, மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட கூடுதல் நீதிபதியுடன் இணைந்து ஆய்வு நடத்தி, தற்போது அந்த கோவில்களின் நிலை குறித்த விபரங்களுடன் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இவற்றை, இரண்டு வாரத்துக்குள் ஹிந்து அறநிலையத்துறை நடைமுறைப்படுத்த வேண்டும் என, தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us