Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/'ஆன்லைன்' வணிகத்தை எதிர்கொள்ள திணறும் கூட்டுறவு சங்க கடைகள்; 'மொபைல் ஆப்' வந்தும் பயனில்லை

'ஆன்லைன்' வணிகத்தை எதிர்கொள்ள திணறும் கூட்டுறவு சங்க கடைகள்; 'மொபைல் ஆப்' வந்தும் பயனில்லை

'ஆன்லைன்' வணிகத்தை எதிர்கொள்ள திணறும் கூட்டுறவு சங்க கடைகள்; 'மொபைல் ஆப்' வந்தும் பயனில்லை

'ஆன்லைன்' வணிகத்தை எதிர்கொள்ள திணறும் கூட்டுறவு சங்க கடைகள்; 'மொபைல் ஆப்' வந்தும் பயனில்லை

ADDED : மார் 22, 2025 06:05 AM


Google News
Latest Tamil News
சென்னை : 'ஆன்லைன்' வணிகத்தால், சென்னையில் 2,000க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் மூடப்பட்டதால், தொழிலில் தாக்குப்பிடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கூட்டுறவு சங்கங்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், 300க்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகின்றன.

தள்ளுபடி


தனியார் அங்காடிகள், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் தள்ளு படி, 'டோர் டெலிவரி' உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகின்றன.

தற்போது, ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், 10 நிமிடங்களில் டோர் டெலிவரி, அதிக தள்ளுபடி என, பல சலுகைகளை வழங்குகின்றன. இதனால், மக்களுக்கு வீட்டில் இருந்தபடியே குறைந்த விலைக்கு மளிகை உள்ளிட்டவை கிடைக்கின்றன.

எனவே, ஆன்லைன் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல், சென்னையில் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆன்லைன் நிறுவனங்களின் போட்டியை சமாளித்து, தொழிலில் தாக்குப்பிடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கூட்டுறவு சங்கங்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

இது குறித்து, கூட்டுறவு இணை பதிவாளர் ஒருவர் கூறியதாவது:


கூட்டுறவு அங்காடிகளில், வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலைக்கு மளிகை விற்கப்படுகிறது. கூட்டுறவு தயாரிப்புகளை, மொபைல் போன் செயலி வாயிலாக வாங்கும் வசதி துவக்கப்பட்டது. இருப்பினும், அதிகம் பேர் வாங்குவதில்லை.

மொபைல் போன் செயலி, ஆன்லைன் வாயிலாக ஆர்டர் பெற்று, டோர் டெலிவரி செய்யப்பட இருந்தது. இதற்கான பணிகளை செயல்படுத்த, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்த சுப்பையன் திட்டமிட்டுஇருந்தார். அவரை, இணை பதிவாளர்கள் எந்நேரத்திலும் தொடர்பு கொண்டு, புதிய திட்டங்கள் குறித்து தெரிவித்து, ஒப்புதல் பெற்றனர்.

நடவடிக்கை


தற்போது, இந்த நிலை இல்லை. இதனால், கூட்டுறவு செயல்பாட்டை மேம்படுத்தும் பணி மட்டுமின்றி, ரேஷன் கடை, கூட்டுறவு வங்கிகளில் ஆய்வுப் பணிகளும் முடங்கியுள்ளன.

எனவே, பல்பொருள் அங்காடிகளை நடத்தும் சங்கங்களே, தொழிலில் தாக்குப்பிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு விபரங்களை சேகரித்து, செயல்படுத்த உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us