இலங்கை சட்டத்தில் திருத்தம் பிரதமருக்கு முதல்வர் கடிதம்
இலங்கை சட்டத்தில் திருத்தம் பிரதமருக்கு முதல்வர் கடிதம்
இலங்கை சட்டத்தில் திருத்தம் பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ADDED : பிப் 09, 2024 09:19 PM
சென்னை:தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கவும், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கை குழுவை புதுப்பிக்கவும், உரிய துாதரக நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் மீன்பிடி பகுதிகள், இலங்கை கடற்படையினரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இலங்கை கடற்படையினர் 243 மீனவர்களை கைது செய்ததுடன், 37 படகுகளை பறிமுதல் செய்தனர்.
கடந்த 28 நாட்களில் மட்டும், ஆறு சம்பவங்களில், 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டுஉள்ளன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது, அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்படும் தாக்குதல்கள், மீனவர்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்படுத்தும் சேதங்கள், கவலையை மேலும் அதிகரித்துள்ளன.
வெளிநாட்டு மீன்பிடி படகுகளை நாட்டுடைமையாக்க, இலங்கை அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 2018ம் ஆண்டு இலங்கை அரசால், கடல்சார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதனால், நல்ல நிலையில் உள்ள பறிமுதல் செய்யப்பட்ட, தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை மீட்டு, தமிழகம் கொண்டு வர முடியவில்லை.
எனவே, பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை திரும்ப பெறவும், உடனடியாக விடுவிக்கவும், அந்த சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்ய, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய, மீனவ சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க, உரிய துாதரக வழிகளை பின்பற்ற வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட, கூட்டு நடவடிக்கை குழுவை புதுப்பிக்க, விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.