குடியிருப்பு, தெருக்களின் ஜாதி பெயரை மாற்றணும்! புதிய பெயர் வைக்க உத்தரவு
குடியிருப்பு, தெருக்களின் ஜாதி பெயரை மாற்றணும்! புதிய பெயர் வைக்க உத்தரவு
குடியிருப்பு, தெருக்களின் ஜாதி பெயரை மாற்றணும்! புதிய பெயர் வைக்க உத்தரவு

பொள்ளாச்சி:மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள அனைத்து அரசு பதிவுகள் மற்றும் பொது பயன்பாட்டிலிருந்து ஜாதி பெயர்களை நீக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள் ஆகியவற்றில் ஜாதி அடிப்படையில் பெயர் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, தலித் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் பொதுவாக 'காலனி' என்ற பெயரிலேயே அடையாளப்படுத்தப்படுகிறது.
இந்த வார்த்தையை அதிகாரப்பூர்வ ஆவணம் மற்றும் பொது பயன்பாட்டிலிருந்தும் நீக்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் மாநகராட்சியில், 677; நகராட்சியில் 455 என, 1,132 இடங்களில், 'காலனி' மற்றும் ஜாதி பெயர் இடம்பெற்றிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அப்பெயரை நீக்கி அதற்கு மாற்றாக, பூக்கள், மரங்கள், பொதுத்தலைவர்கள், வரலாறு, நிலம் மற்றும் இயற்கை அடிப்படையில் பெயர் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள் ஆகியவற்றில் ஜாதி அடிப்படையிலான பெயர்களை நீக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 'காலனி' என்ற வார்த்தையை அதிகாரப்பூர்வ ஆவணம் மற்றும் பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும்.
பெயர்களை மாற்றம் செய்ய, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், அந்தந்த பகுதியில் இந்த கருப்பொருளை மையமாக வைத்து, பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஒப்புதல் பெற்று, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அதனை, அந்தந்த உள்ளாட்சி மன்றத்தில் வைத்து, மாற்றுப் பெயர் சூட்டி, கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு, அந்தந்த தெருவில் குடியிருக்கும் நபர்களின் பெரும்பான்மை ஒப்புதல் பெறப்பட்டால் போதுமானது.
புதிய பெயர்களை சூட்டி, கருத்துருவை, நகராட்சி நிர்வாக இயக்குநர் வாயிலாக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஜாதி அடிப்படையிலான பெயர்களின் பட்டியலில் ஏதேனும் தெரு மற்றும் சாலையின் பெயர் விடுபட்டிருந்தால், அவற்றையும் கருத்துருவில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


