மாணவர், ஆசிரியர் பாதுகாப்புக்காக தேர்வு அறையில் கேமரா அவசியம்
மாணவர், ஆசிரியர் பாதுகாப்புக்காக தேர்வு அறையில் கேமரா அவசியம்
மாணவர், ஆசிரியர் பாதுகாப்புக்காக தேர்வு அறையில் கேமரா அவசியம்

“மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, அரசு பொதுத்தேர்வு நடக்கும் அனைத்து அறைகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்,” என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராமு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கை:
தமிழகம் முழுதும் ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் நேர்மையாக நடப்பதை உறுதி செய்யவும், ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், பொதுத்தேர்வு நடக்கும் அனைத்து பள்ளிகளின் தேர்வு அறைகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு பள்ளியில் பிளஸ் 2 தேர்வு நடந்த போது, அறை கண்காணிப்பாளராக இருந்த முதுகலை ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் கொடுத்ததால், ஆசிரியர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுத்தேர்வு அறையில் நடந்ததாக கூறப்படும் இதுபோன்ற புகார்கள், அது சார்ந்த உண்மை நிலவரத்தை அறிவதற்கும், பொதுத்தேர்வு எழுதும் அறையில் நடக்கக்கூடிய உண்மையான நிகழ்வுகளால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்படுவதற்கும், கேமராக்கள் பொருத்த பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பொதுத்தேர்வு நடக்கும் அறையில், விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் மாணவ - மாணவியரை கண்டித்தால், அறை கண்காணிப்பாளராக உள்ள ஆசிரியர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகளை சொல்வதும், அவரை மிரட்டுவதும், பள்ளியில் நிறுத்தி இருக்கக்கூடிய, அவரது வாகனத்தை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகின்றன.
இதில் உண்மை நிலையை கண்டறிய, அனைத்து நிலைகளிலும் முழுமையாக விசாரித்த பின், தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர் மீது கைது உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
நேர்மையான தேர்வு முறை, அதை தொடர்ந்து சரியான மதிப்பீடு மற்றும் ரிசல்ட் வெளியீடு என்பதே எதிர்கால மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்லது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -