Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வெட்டாறு தடுப்பணையை தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே அமைக்க வேண்டும்: முதல்வருக்கு நயினார் வலியுறுத்தல்

வெட்டாறு தடுப்பணையை தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே அமைக்க வேண்டும்: முதல்வருக்கு நயினார் வலியுறுத்தல்

வெட்டாறு தடுப்பணையை தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே அமைக்க வேண்டும்: முதல்வருக்கு நயினார் வலியுறுத்தல்

வெட்டாறு தடுப்பணையை தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே அமைக்க வேண்டும்: முதல்வருக்கு நயினார் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 15, 2025 06:06 PM


Google News
Latest Tamil News
சென்னை;வெட்டாறு தடுப்பணையை ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அமைக்க வழிவகை செய்யுமாறு முதல்வர் ஸ்டாலினை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம் உத்தமசோழபுரத்தில் கடல்நீர் உட்புகாமலிருக்க வெட்டாற்றின் குறுக்கே கடைமடை தடுப்பணை கட்ட ரூ.49.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போதைய ஆளும் அரசு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தைத் தவிர்த்து விட்டு அதே ஊரில் 2 கி.மீ. மேற்கில் புதிய இடத்தில் அணை கட்டுவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது ஏற்புடையதல்ல.

இதனால் நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் வருவாய் வட்டங்களைச் சார்ந்த 32 கிராமங்களைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களின் தன்மை மாறுவதோடு குடிநீர் உப்புநீராக மாறும் ஆபத்துள்ளதாக அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தும், பல அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்த பிறகும் தேர்வு செய்யப்படாத இடத்தில் தடுப்பணை கட்டும் பணிகளில் தி.மு.க., அரசு கவனம் செலுத்துவது சரியா? மக்களின் நலனைப் புறக்கணித்துவிட்டு தங்களின் தவறான முடிவினில் தி.மு.க., அரசு இத்தனை உறுதியுடன் இருப்பதன் பின்னணி என்ன?

நானும் டெல்டாக்காரர் தான் என மேடைகளில் வெற்றுப் பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் வகையில் தடுப்பணை கட்டப்படுவதைக் கண்டு கொள்ளாமல் அமைதி காப்பது ஏன்?

இது போன்ற கேள்விகளும் தனியார் நிறுவனத்தின் நலனுக்காக புது இடத்தில் தடுப்பணை கட்டப்படுகிறதோ என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுகிறது. குறிப்பாக தி.மு.க., மாவட்டச் செயலாளர் கௌதமுக்கும், அவரது உறவினர்களுக்கும் அந்த ஊரில் நிலம் உள்ளதாகவும், அவர்களின் வசதிக்கேற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் உலா வரும் நிலையில் முதல்வர் மக்கள் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுப்பதே நியாயமாகும்.

எனவே, பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தையும் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் விதமாக இந்தத் தடுப்பணையை ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அமைக்க வழிவகை செய்யுமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us