Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விவசாயிகளின் நலனுக்கு துரோகம் செய்யும் அரசு : அன்புமணி குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலனுக்கு துரோகம் செய்யும் அரசு : அன்புமணி குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலனுக்கு துரோகம் செய்யும் அரசு : அன்புமணி குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலனுக்கு துரோகம் செய்யும் அரசு : அன்புமணி குற்றச்சாட்டு

ADDED : ஜூன் 12, 2025 08:14 PM


Google News
Latest Tamil News
சென்னை: விவசாயிகளின் நலனுக்காக எதையும் செய்யாமல், துரோகம் செய்வதை மட்டுமே தமிழக அரசு தொழிலாகக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை; நெல்லுக்கு முதல்வர் அறிவித்துள்ள கொள்முதல் விலையும் உழவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. உழவர்களின் நலனுக்காக எதையும் செய்யாமல் துரோகம் செய்வதை மட்டுமே தமிழக அரசு தொழிலாகக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

குறுவைப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே பாசனத்திற்கு காவிரி பாசன மாவட்ட உழவர்கள் தயாராக வேண்டும். விதை விதைப்பது, நாற்றாங்கால்களைத் தயார் படுத்துவது போன்ற பணிகளை உழவர்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான விதை, உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள் போன்றவற்றை மானிய விலையில் வழங்குவது தான் குறுவைத் தொகுப்பு திட்டமாகும். அதனால், அந்தத் திட்டத்தை குறைந்தது இரு வாரங்களுக்கு முன்பாவது அறிவித்திருக்க வேண்டும். ஆனால், மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட பிறகும் கூட அத்திட்டத்தை அறிவிக்காதது உழவர்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லாததையே காட்டுகிறது.

அதேபோல், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.2500, சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.2,545 வீதம் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கும் முதல்வர், அதை ஏதோ தமது அரசின் சாதனை போல கூறியிருக்கிறார். நெல்லுக்கு தமிழக அரசு வழக்கமாக வழங்கி வரும் கொள்முதல் விலையை முறையே ரூ.26 வீதமும், ரூ.36 வீதமும் தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. இது ஒன்றும் சாதனையல்ல.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2369 ஆகவும் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ.2389 ஆகவும் மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இது போதுமானதல்ல. மாநில அரசு அதன் பங்காக ரூ.800 ஊக்கத் தொகை வழங்குவதன் மூலம் குவிண்டாலுக்கு ரூ.3500 கிடைக்க வகை செய்ய வேண்டும் என்பது தான் பா.ம.க.,வின் கோரிக்கை ஆகும்.

உழவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவே அவதாரம் எடுத்திருப்பதாகக் கூறும் தமிழக அரசு, அது உண்மை என்றால் நெல்லுக்கான கொள்முதல் விலைக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.800 ஆக உயர்த்த வேண்டும். அதுமட்டுமின்றி, வழக்கமான பொருள்களுடன் ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் சேர்த்து குறுவைத் தொகுப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us