Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 75 வயதிலும் கல்வி கற்கும் ஆர்வம் டிப்ளமா படிப்பில் அசத்தும் முதியவர்

75 வயதிலும் கல்வி கற்கும் ஆர்வம் டிப்ளமா படிப்பில் அசத்தும் முதியவர்

75 வயதிலும் கல்வி கற்கும் ஆர்வம் டிப்ளமா படிப்பில் அசத்தும் முதியவர்

75 வயதிலும் கல்வி கற்கும் ஆர்வம் டிப்ளமா படிப்பில் அசத்தும் முதியவர்

ADDED : செப் 07, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
கல்வி கற்கவும், கல்வி ஆர்வத்திற்கும் வயது வரம்பே இல்லை என்பதை உணர்த்தும் வகையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர், சென்னையில் டிப்ளமா படிப்பில் சேர்ந்து அசத்தி வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. 1950ம் ஆண்டு பிறந்த இவர், பள்ளிக் கல்விக்கு பின், ஐ.டி.ஐ., எனும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் சார்ந்த படிப்பை படித்தார்.

தனியார் நிறுவனங்களில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பணியாற்றினார். தற்போது, அவருக்கு வயது, 75.

இவருக்கு, ரமணிபாய் என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். மணி, தற்போது தன் மனைவியுடன் நசரத்பேட்டையில் வசித்து வருகிறார்.

இவரது மகன் ராமச்சந்திரன் என்பவர், எம்.இ., படிப்பை முடித்து, பொதுப்பணித்துறையில் பணியாற்றுகிறார்.

டிப்ளமா படிக்க வேண்டும் என ஆசைபட்ட மணி, சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லுாரிக்கு கடந்த 2023ம் ஆண்டு சென்றிருக்கிறார்.

படிக்க வயது தடையில்லை என்பதால், கல்லுாரி நிர்வாகமும் அவருக்கு அட்மிஷன் வழங்கியது.

'டிப்ளமா இன் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ்' துறையில் படித்து வரும் அவர், இளம் மாணவர்களுக்கு போட்டியாக, சீருடை அணிந்து தினமும் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து, கல்லுாரிக்கு வந்து செல்கிறார்.

தற்போது, இறுதியாண்டு படிக்கும் அவர், முதலாம் ஆண்டில் 91 சதவீதமும், இரண்டாம் ஆண்டில் 88 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கல்விக்கு வயது தடையில்லை என்பதை, 75 வயதில் மணி நிரூபித்து காண்பித்திருக்கிறார். அவர் எழுதிய தேர்வுகளில் எல்லாம் சிறப்பாக மதிப்பெண் பெற்றிருக்கிறார். இவரை பார்க்கும்போது, மாணவ - மாணவியருக்கு ஊக்கம் கிடைக்கும். - தரணிபதி, கல்லுாரி முதல்வர்.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us