மணல் குவாரி விவகாரம் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
மணல் குவாரி விவகாரம் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
மணல் குவாரி விவகாரம் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
ADDED : ஜன 01, 2024 04:40 AM
சென்னை : சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை எதிர்த்து, தொழில் அதிபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
மணல் குவாரிகளில் நிர்ணயித்த அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருவாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, ஆவணங்களையும் கைப்பற்றியது. விசாரணைக்கு ஆஜராகும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கும் அமலாக்கத்துறை, 'சம்மன்' அனுப்பியது.
இதை எதிர்த்து, தமிழக அரசும், கலெக்டர்கள் தரப்பிலும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. பிரதான வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னையை சேர்ந்த ராஜ்குமார், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் ராமச்சந்திரன், திண்டுக்கல்லை சேர்ந்த ரத்தினம் ஆகியோரும் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன. அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, அப்துல்சலீம் உள்ளிட்டோரும், அமலாக்கத் துறை தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோரும் ஆஜராகினர்.
இரு தரப்பிலும் நடந்த வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.