பயிற்சியின் போது பாய்ந்த ஈட்டி; மூளைச்சாவு அடைந்த மாணவன்; தகவலை கேட்டு தாய் தற்கொலை முயற்சி
பயிற்சியின் போது பாய்ந்த ஈட்டி; மூளைச்சாவு அடைந்த மாணவன்; தகவலை கேட்டு தாய் தற்கொலை முயற்சி
பயிற்சியின் போது பாய்ந்த ஈட்டி; மூளைச்சாவு அடைந்த மாணவன்; தகவலை கேட்டு தாய் தற்கொலை முயற்சி
ADDED : ஜூலை 29, 2024 06:02 PM

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் பள்ளியில் ஈட்டி பாய்ந்து சிகிச்சையில் இருந்த மாணவன் கிஷோர் இன்று (ஜூலை 29) மூளைச்சாவு அடைந்தார். தகவலை கேட்டு மாணவனின் தாய் சிவகாமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூர் தர்ம சாலை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் வயது (35). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிஷோர் (வயது 15) வடலூர் சந்தை தோப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கிஷோர் விளையாட்டிலும் ஆர்வமாக இருந்து சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டுமாவட்ட,மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 24ம் தேதி மாலை மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. அப்போது ஈட்டி எறிதல் பயிற்சியின் போது அங்கு நின்ற கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்து படுகாயம் அடைந்தார். அவர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சையில் இருந்த மாணவன் இன்று(ஜூலை 29) மூளைச்சாவு அடைந்தார். தகவலை கேட்டு மாணவனின் தாய் சிவகாமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மாணவனின் தாய் நலமாக உள்ளார். மாணவன் கிஷோரின் உறவினர்கள் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.