இடி, மின்னலுடன் காற்று: இன்றும், நாளையும் வீசும்
இடி, மின்னலுடன் காற்று: இன்றும், நாளையும் வீசும்
இடி, மின்னலுடன் காற்று: இன்றும், நாளையும் வீசும்
ADDED : ஜூன் 03, 2024 06:16 AM

சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஜூன் 3, 4) பெரும்பாலான இடங்களில், இடி, மின்னலுடன், 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என, வானிலை மையம் அறிவித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மாவட்டங்களில், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று காலை வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், சில இடங்களில் கனமழை பெய்யும்.
தமிழகம், புதுச்சேரியில், இன்றும், நாளையும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று வீசும். மிதமான மழையும் பெய்யும். மேலும், பல இடங்களில், இடி, மின்னலும் அதிகரிக்கும்.
வரும், 5ம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், தர்மபுரி, திருப்பத்துார், வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மாவட்ட கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், கேரள, கர்நாடகக் கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகள் ஆகியவற்றில், வரும், 6ம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில், இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
தமிழகம், புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை பரவத் துவங்கியுள்ளது. பெரும்பாலான உள்மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை துவங்கி விட்டது. மாநிலத்தில் அதிகபட்சமாக, சின்னக்கல்லாரில், 10 செ.மீ., மழை பெய்து உள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருவள்ளூர், திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களைத் தவிர, மற்ற பெரும்பாலான மாவட்டங்களில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை பெய்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.