Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இண்டியா கூட்டணியினர் மவுனம் ஏன்?: பா.ஜ.,- கேள்வி!

இண்டியா கூட்டணியினர் மவுனம் ஏன்?: பா.ஜ.,- கேள்வி!

இண்டியா கூட்டணியினர் மவுனம் ஏன்?: பா.ஜ.,- கேள்வி!

இண்டியா கூட்டணியினர் மவுனம் ஏன்?: பா.ஜ.,- கேள்வி!

ADDED : ஜூன் 24, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று டில்லியில் அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் இன்னமும் கவலைக்கிடமாக உள்ளனர். இறந்தவர்களில், 40க்கும் மேற்பட்டோர் தலித்துகள்.

கலெக்டர், தன் முதல் அறிக்கையில், கள்ளச்சாராயம் குடித்து மக்கள் இறக்கவில்லை என்று மறுத்திருந்தார். மறுநாள் சட்டசபை கூட்டத்தொடர் துவங்க இருந்ததால், கலெக்டரிடம் அவ்வாறு கூறும்படி ஆளுங்கட்சியினர் அழுத்தம் தந்துள்ளனர்.

கலெக்டரின் மறுப்பால், கள்ளச்சாராயத்தை பலரும் தொடர்ந்து குடித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இவ்வளவு பெரிய சோக சம்பவம் நடந்துள்ளது. ஆனாலும், முதல்வர் ஸ்டாலின் இதுவரை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்கவில்லை.

இது, அரசால் நடத்தப்பட்ட கொலை. இதுகுறித்து காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், பிரியங்கா, சோனியா மற்றும் இண்டியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தலைவர்கள் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளனர். இந்த விவகாரம், அவர்களின் அரசியலுக்கு உதவாது என்பதால் அமைதியாக உள்ளனர்.

பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்கும் போது, இண்டியா கூட்டணி தலைவர்கள் கள்ளச்சாராய மரணத்திற்காக, மகாத்மா காந்தி சிலை முன் கருப்புப் பட்டை அணிந்து மவுனத்தை கடைப்பிடிப்பர் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி உள்ளார்.

அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளச்சாராயத்தால் தலித்துகள் இறந்துள்ளனர். இதுபற்றி, காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கார்கே, ராகுல் ஆகியோர் எங்கே சென்றனர்,” என்றார்.

பா.ஜ.,வினர் 10,000 மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல், உயிர் பலிகள் ஏற்பட தி.மு.க., அரசு காரணமாகி விட்டது என்று குற்றம் சாட்டி, மாநிலம் முழுதும் பா.ஜ., சார்பில், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதான பா.ஜ.,வினர், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.சென்னையில் வள்ளுவர் கோட்டம், தி.நகர் அபிபுல்லா சாலை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக, தேனாம்பேட்டை மற்றும் நுங்கம்பாக்கம் போலீசார், பா.ஜ., மாநில நிர்வாகிகள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட, 650 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாநிலம் முழுதும், 10,000 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us