வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத விழுப்புரம் டி.எஸ்.பி.,க்கு 'வாரன்ட்'
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத விழுப்புரம் டி.எஸ்.பி.,க்கு 'வாரன்ட்'
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத விழுப்புரம் டி.எஸ்.பி.,க்கு 'வாரன்ட்'
ADDED : ஜூலை 04, 2024 10:28 PM
சென்னை:கொலை முயற்சி வழக்கில் சாட்சியம் அளிக்க ஆஜராகாத, விழுப்புரம் மாவட்ட டி.எஸ்.பி.,க்கு எதிராக 'வாரன்ட்' பிறப்பித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தரமணி, கானகம் தெருவைச் சேர்ந்தவர் செந்தில், 42. தச்சு தொழிலாளியான இவர், மளிகை கடையும் நடத்தி வருகிறார்.
வீட்டின் அருகில் வசிக்கும் வினோத் என்ற வாலிபர், அப்பகுதியில் கஞ்சா விற்று உள்ளார். செந்தில் கடை முன் வினோத், தன் நண்பர்களுடன் நின்று அரட்டை அடிப்பது வழக்கம்.
வெட்டினார்
இதை விரும்பாத செந்தில், வினோத்தை துரத்தியுள்ளார். ஆத்திரம் அடைந்த வினோத், 2021 அக்., 29ல் செந்திலை வழிமறித்து கத்தியால் வெட்டியுள்ளார்.
செந்தில் அளித்த புகாரின்படி, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வினோத், அவரது நண்பர் அரவிந்த் ஆகியோரை தரமணி போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதிஆபிரகாம் லிங்கன் முன் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் சாட்சி யம் அளிக்க ஆஜராகும்படி, வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ராமலிங்கத்துக்கு 'சம்மன்' அனுப்பப்பட்டது. தொடர்ந்து மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
ஏற்க முடியாது
போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆஜராகி, “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணியில் இருப்பதால், விசாரணை அதிகாரியால் ஆஜராக இயலவில்லை,” எனக்கூறி, அதற்கான ஆவணங்களை வழங்கினார்.
இதையடுத்து, விசாரணை அதிகாரி தரப்பில் கூறிய காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல என்று கூறிய நீதிபதி, அவருக்கு எதிராக 'வாரன்ட்' பிறப்பித்து, வரும் 10ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.