இந்து மக்கள் கட்சியிலிருந்து துணை தலைவர் நீக்கம்
இந்து மக்கள் கட்சியிலிருந்து துணை தலைவர் நீக்கம்
இந்து மக்கள் கட்சியிலிருந்து துணை தலைவர் நீக்கம்
ADDED : ஜூன் 12, 2024 12:45 AM
சென்னை:இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையார், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
'கலவரம் செய்தால் தான், தமிழகத்தில் பா.ஜ., கால் ஊன்ற முடியும்' என, இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையார், திருநெல்வேலி மாவட்ட பா.ஜ., தலைவரிடம் போனில் பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை:
இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவரும், முன்னாள் மாவட்டத் தலைவருமான உடையார், கட்சி கொள்கைகளுக்கு விரோதமாக, 'கலவரம் செய்தால்தான் பா.ஜ., வளரும்' என, தொலைபேசி உரையாடலில் பேசியது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பா.ஜ., கட்சி உள் விவகாரங்களில், இந்து மக்கள் கட்சி நிர்வாகி தலையிடுவது, கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானதாகும். பா.ஜ., மாவட்டத் தலைவரோடு தான் நடத்திய உரையாடலைப் பதிவு செய்து, பொது வெளியில் வெளியிட்டு, ஹிந்து இயக்கங்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.
எனவே, இந்து மக்கள் கட்சியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், தற்காலிகமாக நீக்கப்படுகிறார். இது அவர் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை.
அவரிடம் விளக்கம் கேட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி நிர்வாகிகள் யாரும் அவரோடு இணைந்து செயல்பட்டால், அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.