கோயில் நிலம் மாசு நடவடிக்கை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் நிலம் மாசு நடவடிக்கை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் நிலம் மாசு நடவடிக்கை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 02, 2024 11:11 PM

மதுரை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே பூலாங்குறிச்சியில் கோயில் நிலத்தை மாசுபடுத்திய விவகாரத்தில் விசாரணை கோரியதில், 'போலீசார் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கை நகலை மனுதாரருக்கு வழங்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பூலாங்குறிச்சி ஏ. செல்வம் (சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி) தாக்கல் செய்த மனு:
பூலாங்குறிச்சியில் கருப்பர் கோயில் உள்ளது. இது பொதுக் கோயில். இதில் பூலாங்குறிச்சி ஊராட்சிக்கு உரிமை இல்லை. கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 2019ல் ஊராட்சியின் கட்டடம் அமைக்க முயற்சி நடந்தது. அப்போதைய கலெக்டர் தடை விதித்தார்.
கோயில் புனிதத்தை பாதிக்கும் வகையில் ஊராட்சியின் குப்பைகள் குவிக்கப்படுகிறது. மரக்கன்று நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலை அகற்ற ஊராட்சி தலைவருக்கு உரிமை இல்லை. கோயிலின் புனிதத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி பூலாங்குறிச்சி போலீசில் புகார் செய்தேன். விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
அரசு தரப்பு: புகாரில் உண்மை இல்லை எனக்கூறி போலீசார் விசாரணையை முடித்தனர். திருப்பத்துார் கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: இறுதி அறிக்கையின் நகல் உள்ளிட்ட விசாரணையின் இதர ஆவணங்களை மனுதாரருக்கு 2 வாரங்களில் போலீசார் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.