செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகள்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகள்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகள்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 04, 2024 12:31 AM

சென்னை: செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என தனி விதிமுறைகளை வகுக்க கோரிய விண்ணப்பத்தை, எட்டு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவேற்காடைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஆன்டனி கிளமென்ட் ரூபின் தாக்கல் செய்த மனு:
இந்தியாவில் செல்லப்பிராணிகள் எண்ணிக்கை 3.2 கோடி. அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பொது முடக்க காலத்துக்கு பின், செல்லப்பிராணிகள் வளர்ப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
தகுதியில்லாதவர்கள்
வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர், விடுமுறை அல்லது தொழில் காரணமாக வெளியூர் செல்லும் போது, பிராணிகள் பராமரிப்பு மையங்களில் கட்டணம் செலுத்தி, அவற்றை அங்கு விட்டு செல்கின்றனர்.
தமிழகத்தில் சென்னை உட்பட நாடு முழுதும் முறைப்படுத்தப்படாத, பல செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அந்த மையங்களில், தகுதியில்லாத நபர்கள் பராமரிப்பாளர்களாக உள்ளனர். இது போன்ற நபர்கள், பிராணிகளை உரிய முறையில் பராமரிக்காததால், சில நேரங்களில் அவை இறந்து விடுகின்றன.
சென்னையில் இது போன்று ஓரிரு சம்பவங்கள் நடந்துள்ளன. வர்த்தக நோக்கில் செயல்படும் இது போன்ற பராமரிப்பு மையங்களை ஆய்வு செய்த பிறகே ஒப்புதல் வழங்க வேண்டும். இந்த மையங்களை முறைப்படுத்த, பிரிட்டனில் 2018ல் விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.
பிரிட்டனை போல செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களை முறைப்படுத்த, தனி விதிமுறைகளை வகுக்கக் கோரி, கோரிக்கை மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மிருக வதை தடை சட்டப் பிரிவுகளின் கீழ், செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என, தனி விதிமுறைகளை வகுக்கக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பரிசீலியுங்க
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து, எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.