செந்தில் பாலாஜி 3 மனு தாக்கல் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்
செந்தில் பாலாஜி 3 மனு தாக்கல் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்
செந்தில் பாலாஜி 3 மனு தாக்கல் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்
ADDED : ஜூன் 20, 2024 02:47 AM
சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்தாண்டு ஜூனில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது. ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில், செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜாமின் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனுவும் நிலுவையில் உள்ளது. தற்போது, ஓராண்டாக புழல் மத்திய சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து, புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன், நேற்று பிற்பகல் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். பின், அவரின் நீதிமன்ற காவலை, 40வது முறையாக ஜூன் 25 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
3 புதிய மனுக்கள்: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்படும் என, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், செந்தில் பாலாஜி தரப்பில், மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், உத்தரவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புதிய மனுக்களில், 'ஆவணங்கள் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்; அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்க கோரி மனுவை, தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்றத்தில் ஜூன் 21ம் தேதி வரவுள்ளது.
'இந்த மனுக்களில் உத்தரவு வரும்வரை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்ககோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும். நகல், அசல் வங்கி ஆவணங்களுக்கு இடையே வேறுபாடு உள்ளதால், விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, ஜூன் 25ம் தேதி, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.