ADDED : ஜூலை 18, 2024 10:20 PM
சென்னை:''அ.தி.மு.க.,வின் முடிவு இன்னும் சில நாட்களில் தெரியும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
தமிழகம் முழுதும் அ.தி.மு.க., தொண்டர்கள், பொதுமக்கள், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வின் சக்திகள்; கட்சி உருவானதில் இருந்து இருந்தவர்கள்; கட்சி வளரவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீதும் தீரா பற்று கொண்டவர்கள்; கொள்கை பிடிப்புடன் இருந்தவர்கள் என, அனைவரும் இணைய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அதை நாங்களும் சொல்லி கொண்டிருக்கிறோம். எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து ஜெயலலிதா காலம் வரை, அ.தி.மு.க.,வில் இணைந்து பணியாற்றினோம். இக்கட்சி பிளவுபட்டிருப்பது தமிழக ஜனநாயக சக்திகளுக்கு எதிரானது. பழனிசாமியிடம் போய் எங்களை கட்சியில் இணைத்துக் கொள்ளுங்கள் என யாரும் கேட்கவில்லை. அவராக கேள்வி கேட்டுக்கொண்டு, அவராக பதில் கூறுகிறார். இது நல்லதல்ல. இக்கட்சியின் முடிவு இன்னும் சில நாட்களில் தெரியும்.
அனைத்து தரப்பு தொண்டர்கள், தலைவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.